தமிழகத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக வேட்பாளர்களின் அனல் பறந்த பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பெரம்பலூர் தொகுதியில் திமுக நிர்வாகியின் காரிலிருந்து ரூ.2.44 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெயராமன் என்பவரது காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டபோது, கணக்கில் வராத இந்தப் பணம் கண்டறியப்பட்டது. பணத்துடன் சேர்த்து வாக்காளர் பூத் சிலிப்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், இது வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்த பணம் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, பெரம்பலூர் தொகுதியில் பணபலம் தேர்தல் நேர்மையைப் பாதிக்கும் எனக் கூறி, அங்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணத்தின் பின்னணி குறித்து தேர்தல் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
