திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் அருகே 15 வயது சிறுமி 8 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் அருகே உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்த நிலையில், இந்த கொடூர தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் கண்ணீர் மல்கப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் முக்கியத் தடயங்களைச் சேகரித்து வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பான சூழல் என நம்பி வந்த இடத்தில் சிறுமிக்கு நேர்ந்த இந்தத் துயரம், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
