கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பொது சாலையை காங்கிரஸ் எம்.பி. கோபிநாத் ஆக்கிரமித்துள்ளாரா என ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஒசூர் மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓசூரை சேர்ந்த எஸ்.ஜி. நாயஸ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சிங்காரவேலு முதலியார் தெருவினை நேதாஜி சாலையுடன் இணைக்கும் பொது சாலையினை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.-வும், தற்போதைய எம்.பி.-யுமான கே.கோபிநாத் ஆக்கிரமித்து, இரும்பு கேட் போட்டுள்ளதுடன், கடைகளையும் கட்டியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பதவி செல்வாக்கையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி, வருவாய் மற்றும் நகராட்சித் துறை அதிகார துஷ்பிரயோகம் செய்து, புறம்போக்கு நிலங்களுக்குப் பட்டா பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பொதுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அகற்றும்படி மாவட்ட நிர்வாகத்திற்கும், வருவாய் துறைக்கும் உத்தரவிட வேண்டுமென மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.சுரேந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.சுந்தரவதனம், கடந்த ஆண்டு ஜூலை 22 மற்றும் 27ஆம் தேதிகளில் மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை, ஓசூர் மாநகராட்சி ஆகியோரிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வாதிட்டார்.
இதையடுத்து, பொது சாலையை எம்.பி. கோபிநாத் ஆக்கிரமித்துள்ளாரா என்பது குறித்து ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஓசூர் மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
