ஒரு கொலை குற்றவாளியை வழக்கறிஞராக பதிவு செய்தது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும், பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை ரத்து செய்ய சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டத்துறை இணைத் தலைவர் எஸ்.கே. நவாஸ், மற்றும் அருணாச்சலம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது இணைத் தலைவர் எஸ்.கே.நவாஸ் கூறியதாவது;-
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த வழக்கில் பேரறிவாளனை குற்றவாளி என்று தடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற போதும் அவர் குற்றவாளி என்று உறுதி செய்து மரண தண்டனையை உறுதி செய்தது. கருணை அடிப்படையில் அவரது மரண தன்னை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்ட அவர் தற்போது தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்துள்ளார். இதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறோம். நீதித்துறையும் பார் கவுன்சிலும் இதனை விசாரித்து உடனடியாக அவரது பதிவை ரத்து செய்ய வேண்டும்.
முன்னாள் பிரதமரை கொலை செய்த ஒரு குற்றவாளியை வழக்கறிஞராக பதிவு செய்தது மிகப்பெரிய தவறு. பதிவு செய்வதற்கு முன்பு பார் கவுன்சில் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களிடம் ஆலோசனை கேட்டு இருக்க வேண்டும்.
ஒரு கொலை குற்றவாளியை வழக்கறிஞராக பதிவு செய்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. பார் கவுன்சில் இதனை பரிசீலனை செய்து முடிவெடுப்பார்கள் என நம்புகின்றோம்.
பிரதமரை கொலை செய்த குற்றவாளியை வழக்கறிஞராக பதிவு செய்ததை உலக அளவில் இந்தியாவிற்கு ஏற்பட்ட தலைகுனிவாகவே பார்க்கின்றோம்.
உடனடியாக பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை ரத்து செய்யாவிட்டால் உச்ச நீதிமன்றத்தை நாட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் அணி முடிவு செய்துள்ளது.
தீவிரவாத இயக்கங்களுடன் இணைந்து அவர் பிரதமர் படுகொலையில் ஈடுபட்டு இருக்கின்றார். பேரறிவாளன் நிரபராதி என்று எந்த நீதிமன்றமும் உறுதிப்படுத்தவில்லை. இவர் தண்டனை குற்றவாளி என்று தான் உறுதிப்படுத்தி உள்ளது. வழக்கறிஞர் பதிவை ரத்து செய்ய சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.
பேரறிவாளனை வழக்கறிஞராக பதிவு செய்தது குறித்தும் உச்சநீதிமன்றத்தில் எங்களது வழக்கில் நாங்கள் முறையிடுவோம் என தெரிவித்தார்.
