தமிழ்நாட்டில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து சமீப காலமாகவே பரவலான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், தமிழக அரசியல் விவகாரங்களில் கருத்து தெரிவித்து வரும் ஆடிட்டரும் பாஜக ஆதரவாளருமான எஸ். குருமூர்த்தி வெளியிட்ட கருத்துகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
“தமிழ்நாட்டில் ஒரு சினிமா நடிகர் அரசியல்வாதியாக வெற்றி பெற முடியாது” என்ற அவரது கருத்து, விஜய் ஆதரவாளர்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
விஜய் வெற்றி சாத்தியமா… குருமூர்த்தி சொல்வது என்ன?
பேட்டி ஒன்றில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எஸ். குருமூர்த்தி, “விஜயைப் பற்றி எனக்கு தெரியாது. சினிமாவே எனக்குத் தெரியாது. அப்படியிருக்க விஜய்யைப் பற்றி எப்படி தெரியும்?” என்று தொடங்கி, தமிழக அரசியலில் இனி நடிகர்கள் அரசியலில் வெற்றி பெறுவது குறித்த தனது சந்தேகத்தை வெளியிட்டார். அவர் குறிப்பிட்ட முக்கியமான அம்சம், எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்ஜிஆர்) வெற்றி பெற்ற விதம். “எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கியதற்கு காரணம், திமுகவில் 30 வருடங்கள் எம்ஜிஆர் ரசிகர் மன்றம் இருந்தது. எம்ஜிஆர் ரசிகர்கள் திமுகவில் வேலை செய்து, அவர்களுக்கு அரசியல் அத்துப்படியாக இருந்தது. அதாவது திமுகவுக்குள்ளேயே அதிமுக இருந்தது. அதனால், எம்ஜிஆர் அதிமுகவை அமைக்கும்போது அதிமுக தயாராக இருந்தது” என்று அவர் விளக்கம் அளித்தார்.
ரஜினிக்கும் அதே சிக்கல்
மேலும் பேசிய அவர், “ஒரு ரசிகர் கூட்டத்தை நேரடியாக அரசியல் கட்சியாக மாற்றுவது எளிதல்ல. இதே சிக்கல் ரஜினிகாந்துக்கும் ஏற்பட்டது. ஒரு கூட்டத்தை அமைப்பாக மாற்ற முடியாது. ஒரு கூட்டத்தை கட்சியாக மாற்ற முடியாது. இந்த முயற்சிகள் எல்லாம் பெரிய அளவுக்கு வெற்றி அடையாது” என்று கூறினார். இந்தக் கருத்து, நடிகர்கள் அரசியலுக்கு வரும் போது எதிர்கொள்ளும் சவால்களை சுட்டிக்காட்டுவதாக பார்க்கப்படுகிறது.
விஜய் ஆதரவாளர்கள் எதிர்ப்பு
ஆனால், குருமூர்த்தியின் இந்த கருத்துகள் விஜய் ஆதரவாளர்களிடம் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்கள் குருமூர்த்தியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “இது பழைய அரசியல் பார்வை; புதிய தலைமுறை அரசியலை புரிந்து கொள்ளாத கருத்து” என்று அவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, இன்றைய அரசியலில் சமூக ஊடகங்களின் தாக்கம், இளைஞர்களின் ஈடுபாடு போன்றவை மாறுபட்ட சூழலை உருவாக்கியுள்ளன என்பதே அவர்களின் வாதம்.
இன்னொரு தரப்பினரோ, “ விஜய்யை அரசியலுக்குள் அழைத்து வந்ததே உங்கள் பாஜகதானே..? , இவர்தான் ஒரு துக்ளக் விழாவில் இந்த பக்கம் மோடி போட்டோவையும், அந்த பக்கம் ரஜினி போட்டோவையும் போட்டு போஸ்டர் அடித்தால் ஓட்டு கொட்டும் என்று பேசினார்” என்றெல்லாம் எதிர்கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் நடிகர்களின் பங்களிப்பு மறுக்க முடியாத ஒன்றாகும். எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து நீண்டகாலம் ஆட்சி செய்துள்ளனர். இதேபோல், கருணாநிதி போன்ற தலைவர்களும் சினிமா துறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாக இருந்தனர்.
அதே சமயம், தற்போதைய சூழல் முற்றிலும் மாறுபட்டதாகவும் பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சிகள் வலுவான அடித்தள அமைப்புகள், நீண்டகால கட்சி பணிகள் மற்றும் வாக்காளர்களின் மனநிலையை நாடி பிடித்து பார்க்கும் அனுபவங்களைக் கொண்ட கட்சிகளாக உள்ளன.
இத்தகைய சூழ்நிலையில், விஜய் போன்ற ஒரு தனிநபரின் பிரபலமோ அல்லது ரசிகர் வட்டாரமோ மட்டும் தமிழக அரசியலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போதுமானதாக இருக்காது என்பதும் மூத்த அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயம் விஜய்யின் தவெக எவ்வளவு வலுவாக உள்ளது என்பதற்கும், மக்கள் மனநிலை என்ன என்பதற்கும் மே 4 ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் பதில் சொல்லி விடும்.
