தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் இன்று மாலை 4.30 மணியளவில் ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலவி வரும் அரசியல் இழுபறியில், தற்போது புதிய திருப்பமாக தமிழக வெற்றிக் கழகம் அரசு அமைக்க இடதுசாரி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது. ஆதரவு அளிப்பது தொடர்பான கடிதத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெகவிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கியது. இதன் மூலம் தவெக ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தவெக-விற்குத் தனது ஆதரவை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பெரும்பான்மைக்கு இன்னும் 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தவெக-விற்கு தேவைப்படுகிறது.
ஆதரவு தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு நேரில் சென்று விஜய் நன்றி தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மாலை 4:30 மணி அளவில் மீண்டும் ஆளுநரை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, தங்களுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் கடிதங்களை அவர் சமர்ப்பித்து, ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
