தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். முதலமைச்சர் விஜய் அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் சாலைகளில் பேனர்கள் வைக்கக் கூடாது. வாகனப் பேரணிகளின் போது எக்காரணம் கொண்டும் விதிகளை மீறக் கூடாது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது தொண்டர்களின் கடமை. ஆர்ப்பாட்டங்களை விடுத்து, மக்கள் பாராட்டும் வகையிலான நலத்திட்டப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
நமது இயக்கம் மக்களுக்காகத் தொடங்கப்பட்டது. அவர்களுக்கு ஒரு சிறு தொந்தரவு கூட நம்மால் ஏற்படக்கூடாது என்பதில் முதலமைச்சர் விஜய் மிக உறுதியாக இருக்கிறார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறலில் ஈடுபடும் நபர்கள் உடனடியாகக் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவார்கள்.”
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகிகள், தங்கள் பகுதிக்கு உட்பட்ட தொண்டர்களை முறைப்படுத்தி, அவர்கள் எவ்வித இடையூறிலும் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாடும், ஒழுக்கமும் தான் கழகத்தின் அடிப்படை என்பதை ஒவ்வொரு தொண்டரும் உணர வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
