தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அபார வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 144 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று, தவெக அரசு தனது பெரும்பான்மையை வெற்றிகரமாக நிரூபித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கடந்த மே 10-ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், இன்று சட்டப்பேரவையில் தனது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை அவர் முன்மொழிந்தார்.
கூட்டணி கட்சிகளின் ஆதரவும் வாக்கெடுப்பு நிலவரமும்:
இந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில், காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகள் மற்றும் ஐயுஎம்எல் உறுப்பினர்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்தனர். ஒரு முக்கிய திருப்பமாக, அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அணியினரும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். அதே சமயம், திமுக மற்றும் தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. குறிப்பாக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர். விவாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன்படி, தவெக அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகள், எதிர்ப்பாக 22 வாக்குகள், நடுநிலை: 5 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். வாக்கெடுப்பின் முடிவில், தவெக அரசுக்குத் தேவையான பெரும்பான்மையை விடக் கூடுதல் பலம் இருப்பதை உறுதி செய்த சபாநாயகர், நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றதாக முறைப்படி அறிவித்தார். இந்த வெற்றியின் மூலம் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை வழங்குவதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது
