கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
கோயம்புத்தூரில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி காணாமல் போன நிலையில், பின்னர் கண்ணம்பாளையம் குளம் அருகே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள ஊடகச் செய்திகள் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் (NCW) தானாக முன்வந்து (suo motu) வழக்கை எடுத்துக்கொண்டுள்ளது.
தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயா ரஹாட்கர், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த வழக்கில் உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை (ATR) ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் விவரங்கள், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள பிரிவுகள், குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளாரா, காவல் விசாரணை நிலை, உடற்கூறு மற்றும் தடயவியல் ஆய்வு அறிக்கைகள், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்கள் பற்றிய முழு விவரங்களையும் ஆணையம் கோரியுள்ளது.
மேலும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு உளவியல் ஆலோசனை, பாதுகாப்பு மற்றும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் விளக்குமாறு கேட்டுள்ளது. இந்த விசாரணை மிகுந்த உணர்வுபூர்வத்துடனும் அவசரத்துடனும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
சிறுமிகள் மீது நடைபெறும் இத்தகைய கொடூர வன்முறைச் சம்பவங்கள் மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கவை என்றும், குற்றவாளிகளுக்கு சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
