சட்டமன்ற தேர்தல் முடிந்ததில் இருந்தே தமிழக அரசியலில் புயல் காற்று வீசிக் கொண்டே இருக்கிறது. யாரும் எதிர்பாரா வண்ணம் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடித்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
எதிர்கட்சியாக திமுக இருக்க, 50 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியமிக்க கட்சியான அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. எடப்பாடி பழனிசாமி ஆதரவு, சி.வி.சண்முகம், எஸ்.பி வேலுமணி ஆதரவு என எம்.எல்.ஏக்கள் இரு புறமாக பிரிந்தனர். பல எம்.எல்.ஏக்கள் அதிமுகவுக்கு சரியான தலைமை இல்லாததால், யாரை தலைமையாக ஏற்றுக் கொள்வது என்ற சிக்கலில் சிக்கி தவித்து, தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். நேற்று,
எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்களான தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா, மதுராந்தகம் எம்.எல்.ஏ குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆகியோர் கூண்டோடு தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து தங்களது ராஜினாமா கடித்தத்தை கொடுத்த கையோடு, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதன்மூலம் அதிமுக எம்.எல்.ஏக்களின் பலம் 47-ல் இருந்து 44 ஆக குறைந்தது. இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏவான அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்கிறார். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்திலும் இணைகிறார். இதன் மூலம் அதிமுக எம்.எல்.ஏக்கள் பலம் 43 ஆக குறைந்துள்ளது.
