தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா குறித்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ். மணியன் மற்றும் கட்சியின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் இன்பதுரை ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “கடந்த 13-ஆம் தேதி தமிழக பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது, அரசின் மீது எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். ஆனால், அந்த கொறடா உத்தரவை மீறி 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி கடிதம் கொடுத்திருந்தார். அந்தக் கடிதம் சபாநாயகரின் ஆய்வில் இருப்பதாக அவரே கூறியிருந்தார்.
இந்த நிலையில், தங்களுக்கு எதிராக கட்சித் தாவல் சட்டம் பாய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் மீதான தகுதி நீக்க மனு சபாநாயகரின் பரிசீலனையில் இருக்கும் போதே, அவசர அவசரமாக இந்த ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டது விதிகளுக்கும், சட்டத்திற்கும் முற்றிலும் முரணானது. இதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என நாங்கள் மனு அளித்துள்ளோம்” என்றார்.
ஆளுங்கட்சியைத் தாக்கிப் பேசிய அவர், “சட்டமன்றத்தில் பேசும்போது இந்த அரசு ‘குதிரை வேகத்தில்’ செயல்படும் என்று முதலமைச்சர் கூறினார். ஆனால், இவர்கள் குதிரை பேரத்தைத்தான் குதிரை வேகத்தில் நடத்துகிறார்கள் என்பது பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் நன்றாகத் தெரிகிறது. காலையில் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுக்கிறார்கள்; அடுத்த ஐந்து நிமிடத்தில் மேல்தளத்தில் உள்ள அமைச்சர்களின் அறையில் அவர்களுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.
இதைப் பார்க்கும்போது இது தமிழக அரசின் தலைமைச் செயலகமா அல்லது தமிழக வெற்றி கழகத்தின் கட்சி அலுவலகமா என்ற சந்தேகம் எழுகிறது. தூய்மையான ஆட்சி தருவதாகக் கூறிவிட்டு, முறைதவறி, பின்வாசல் வழியாக ஆட்சியைத் தக்கவைக்க குதிரை பேரத்தில் ஈடுபடுவதே இந்த அரசின் சாதனை. அதேநேரம், தாங்கள் செய்த தவறை உணர்ந்து 5 சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்புக் கோரி, அவரது தலைமையை ஏற்பதாக சபாநாயகரிடம் கடிதம் வழங்கியுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய கட்சியின் முக்கிய வழக்கறிஞரான இன்பதுரை, “கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் ஒரு நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது, சபாநாயகர் எவ்வாறு ஒரு உறுப்பினரின் ராஜினாமாவை அவசரமாக ஏற்றுக்கொள்ள முடியும்? பேரவையின் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியான பிறகுதான் ஒரு ராஜினாமா சட்டப்படி செல்லும். ஆனால், அதற்கு முன்பாகவே அவர்கள் மாற்றுக்கட்சியில் இணைந்துவிட்டனர். எனவே, இந்த ராஜினாமாவை சபாநாயகர் நிராகரிக்க வேண்டும்.
சபாநாயகரின் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சிலர் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்; அது பொய். எந்த ஒரு அரசாணையை வெளியிட்டாலும், தவறு இருக்கும் பட்சத்தில் அதைத் திரும்பப் பெறும் அதிகாரம் சட்டத்திற்கு உண்டு” என்று சட்ட விளக்கமளித்தார்.
