திருச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் 9 மாதத்தில் இறந்துபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, சுருட்டப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் (62). இவருக்கு 3மகள்களும், 1மகனும் உள்ளனர். இவருடைய மூத்த மகள் அம்ருதா பிரியதர்ஷினி (27). பி.எஸ்.சி பட்டதாரியான இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருச்சியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் தங்கி வேலைக்காக படித்து வந்துள்ளார்.
அப்போது தொட்டியம் மேலத்தெருவை சேர்ந்த மகேஷ்குமார் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி உள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 9மாதங்களுக்கு முன்பு இருவரும் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பின் அம்ருதா பிரியதர்ஷினி, தொட்டியம் மேலத்தெருவில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (25.5.2026) அம்ருதாவின் தந்தை கேசவன் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவருடைய மனைவி பதற்றத்துடன் தொலைபேசியில் அழைத்து, மகள் அம்ருதா பிரியதர்ஷினி பேச்சு மூச்சில்லாமல் தொட்டியம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த கேசவன் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது அம்ருதா பிரியதர்ஷினி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
காதலித்து திருமணம் செய்த 9 மாதங்களிலேயே மகள் இறந்துள்ளதால் மகளின் இறப்பு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு தந்தை கேசவன், தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் பேரில் தொட்டியம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 9 மாதங்களிலேயே அமிருதா பிரியதர்ஷினி இறந்து போனதால் வரதட்சனை கொடுமையா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
