19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் வெளியேற்றுதல் சுற்றில் (Eliminator), சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2-வது தகுதி சுற்றுக்கு (Qualifier 2) முன்னேறியது.
நியூ சண்டிகரில் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி அதிரடித் தொடக்கத்தை அளித்தார். 16 பந்துகளில் அரைசதம் கடந்து சூர்யவன்ஷி மிரட்டினார். பேட் கம்மின்ஸ் வீசிய 3-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய சூர்யவன்ஷி, ஒரு ஐ.பி.எல். சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்தார்.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யவன்ஷி 97 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து துருவ் ஜூரேல் அரைசதம் அடிக்க, ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்தது.
244 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணி, ராஜஸ்தானின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத், 19.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நிதிஸ் குமார் ரெட்டி (38 ரன்கள்) மற்றும் சலீல் அரோரா (35 ரன்கள்) மட்டுமே ஓரளவு ரன்கள் சேர்த்தனர்.
இதன் மூலம் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதனையடுத்து, முதலாவது தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் ராஜஸ்தான் நாளை மறுநாள் (மே 29) மோதுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி மே 31ம் தேதி அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பெங்களூரு அணியுடன் பலப்பரிட்சை நடத்த உள்ளது.
