டெல்லி கேப்பிட்டல்ஸ் கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் அபிஷேக் போரல் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளது கொல்கத்தா உயர் நீதிமன்றம். ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள மக்ரா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது.
நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா தலைமையிலான அமர்வு, அபிஷேக் போரலை உடனடியாக கைது செய்யுமாறு மக்ரா போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும், அவரிடம் உள்ள அனைத்து மின்னணு சாதனங்களையும் கைப்பற்றி பரிசோதிக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கைது நடவடிக்கைக்குப் பின் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகள் குறித்து வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின்படி, அபிஷேக் போரல் காதல் என்ற பெயரில் அவரை அணுகி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் தனியாக இருந்தபோது எடுக்கப்பட்ட அந்தரங்க புகைப்படங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அபிஷேக் உட்பட இரு நபர்கள் மீது பல்வேறு ஐபிசி பிரிவுகளின் கீழ் மக்ரா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரர் தரப்பு வழக்கறிஞர், “இந்த இருவரும் தங்களது கட்சிக்காரரை மட்டுமல்ல, பல பெண்களை ஆசை வார்த்தைகளால் மயக்கி அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்களை எடுத்து மிரட்டி வருகின்றனர்” என நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், உடனடி கைது உத்தரவைப் பிறப்பித்தது. இந்த வழக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அபிஷேக் போரல் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரராக அறியப்படுகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், விசாரணை விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
