வானியல் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த அரிய வான்வெளி நிகழ்வான ‘புளூ மைக்ரோ மூன்’ (Blue Micro Moon) இன்று (மே 30) இரவு நிகழ உள்ளது. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் இந்த அதிசயத்தைக் காணப் பொதுமக்களும், வானியல் ஆர்வலர்களும் ஆர்வத்துடன் உள்ளனர்.
ஒரு ஆங்கில மாதத்தில் இரண்டு பௌர்ணமி தினங்கள் வந்தால், அதில் இரண்டாவதாக வரும் பௌர்ணமி ‘புளூ மூன்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த மே மாதத்தில் மே 1-ம் தேதி முதல் பௌர்ணமி வந்த நிலையில், இன்று இரண்டாவது பௌர்ணமி வருகிறது.

சந்திரன் பூமியைச் சுற்றி வரும் போது, அது பூமியில் இருந்து மிக நீண்ட தொலைவில் (சுமார் 4,06,135 கி.மீ) இருக்கும் போது, சாதாரண நாட்களை விட நிலவு அளவில் சிறியதாகவும் மங்கலாகவும் தோன்றும். இதனையே ‘மைக்ரோ மூன்’ என்கிறோம். புளூ மூன் நிகழ்வு பொதுவாக 2 முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும். ஆனால், இது ‘மைக்ரோ மூன்’ உடன் இணைந்து நிகழும் அபூர்வ நிகழ்வு, சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அரங்கேறுகிறது. இதற்கு முன்னதாக கடந்த 1999-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வை இந்தியா முழுவதும் இன்று மாலை அல்லது இரவு வானில் தெளிவாகக் காணலாம். வானம் மேகமூட்டம் இன்றித் தெளிவாக இருந்தால், எவ்வித தொலைநோக்கியும் இன்றி வெறும் கண்களாலேயே இந்த அதிசயத்தைக் கண்டு ரசிக்க முடியும். நிலவு உதிக்கும் நேரத்தில் சற்று பெரியதாகவும், பொன்னிறம் அல்லது ஆரஞ்சு நிறத்திலும் காட்சியளிக்க வாய்ப்புள்ளது. பின்னர் வானில் உயர உயர அது வழக்கமான வெள்ளை நிறத்திற்கு மாறும்.
இந்த அரிய நிகழ்வு வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக அமையும் என்பதால், இன்று (மே 30) இரவு வானத்தை உற்று நோக்குமாறு வானியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
