திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதோடு, முறைகேடாக நடந்து வரும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் 2-ஆம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர்.
முருகனுக்கு உகந்த நாட்கள், விழாக்கள், பண்டிகைகளின் போது லட்சக்கணக்கில் பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து மொட்டை அடிப்பது உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செய்துவிட்டு சுவாமியை கண்ணாரக் கண்டு மனதார வேண்டிச் செல்வதுண்டு.
அப்படி முருகனை வணங்க வரும் பக்தர்கள், பொது தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் முதியோருக்கான தரிசனம் என, மூன்று வரிசைகளில் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால்,, அங்குள்ள அதிகாரிகள், அர்ச்சகர்கள் முதல் கடைநிலை காவலர்கள் வரை பக்தர்களிடம் கையூட்டு பெற்று அவர்களை குறுக்கு வழியில் தரிசனத்துக்கு அனுப்புவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
தற்போதை ஆட்சி மாற்றத்திற்கு பின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான ரமேஷ், மே 29-ஆம் தேதி மாஸ்க் அணிந்தபடி திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவரது உதவியாளரிடமே தரிசனத்திற்காக ஜிபே மூலம் 4ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிய அர்ச்சகர் மற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அர்ச்சகர் கோவிலில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டதோடு, காவலர்கள் பணி நீக்கமும் செய்யப்பட்டனர். மேலும் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
அமைச்சரின் இந்த நடவடிக்கையை, விதிமுறையை மீறி செயல்பட்டதாகக் கூறி, தி.மு.க., முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ கண்டித்ததோடு சாதிரீதியாகத் தொடர்புபடுத்தி குற்றமும்சாட்டியிருந்தார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் ரமேஷ், ‘மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் ஜாதி, மத பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும். கோவிலில், இன்னும் பல முறைகேடுகள் நடந்து வருவதை விரைவில் வெளியே கொண்டு வருவேன்’ என, தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில்தான், அமைச்சர் ரமேஷ் விரைவில் திருச்செந்தூர் கோயிலில் அதிரடி களையெடுப்பை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது கோயிலில் பக்தர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு குறுக்கு வழியில் அழைத்து செல்வதில் கிடைக்கும் தொகையை அர்ச்சகர்களுடன் அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து பங்கிட்டு கொள்வதாகவும், இதனால் கோயிலுக்கு வரவேண்டிய வருவாய் தொடர்ந்து தடைபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், கடைகளில் கூடுதல் வாடகை வசூலிப்பது, ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமல் இருப்பது என உயர் அதிகாரிகள் சிலர் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவோடு, இவ்வளவு நாட்களும் அவர்கள் செயல்பட்டு வந்த நிலையில், இதுதொடர்பான முழு விபரத்தையும் அமைச்சர் ரமேஷ் தனது ஆய்வின்போது சேகரித்து வைத்துள்ளதாகவும், எனவே விதிமுறை மீறியவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் என அனைவரும் இன்னும் சில நாட்களில் இடமாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
