19வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை தோற்கடித்து இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு 7.30மணிக்கு தொடங்கிய போட்டியில், டாஸ் வென்றது பெங்களூரு அணி. முதலில் அந்த அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால், குஜராத் அணி வீரர்கள் முதலில் களம் கண்டனர்.
தொடக்க வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் சுப்மன் கில், 12, 10 ரன்களில் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அடுத்து களமிறங்கிய நிஷாந்த் 20 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 19 ரன்களில், அர்ஷத் கான் 15 ரன்களிலும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் மட்டும் 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
பெங்களூரு தரப்பில், ரஷிக் சமால் தர் அதிகபட்சமாக 3 விக்கெட்களையும், புவனேஷ்வர் குமார், ஜேசல்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், க்ருணால் பாண்டியா 1 விக்கெட்டையும் எடுத்தனர். 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் தொடக்கம் முதலே ரன்களை குவிக்கத் தொடங்கினர்.
விராட் கோலி, வெங்கடேஷ் ஐயர் இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர். வெங்கடேஷ் ஐயர் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து இறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி தனித்து நின்று 75 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து பெங்களூரு அணி அபார வெற்றி பெற்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்தத் தொடரில் வெற்றியடைந்த பெங்களூரு அணி வீரர்களுக்கு ரூ.20கோடி பரிசுத் தொகையும், 2ம் இடம் பிடித்த குஜராத் அணிக்கு ரூ.13கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. ஆட்ட நாயனகான 75 ரன்கள் அடித்த விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். 17 வருடங்களுக்கு பிறகு போன வருடம் முதல்முறையாக ஐபில் கோப்பையை வென்ற பெங்களூரு அணி, இந்த வெற்றியின் மூலம் தற்பொது மீண்டும் அந்தக் கோப்பையை தன்னிடத்தே வைத்துக் கொண்டுள்ளது.
