சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அவரது முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இக்கூட்டத்தில், கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களையும், எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளார்.
கூட்டத்தில் பேசிய முதல்வர், அமைச்சர்கள் அனைவரும் மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும், லஞ்ச ஊழல்களுக்குத் தனது அரசில் துளியும் இடமில்லை என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்களோ அல்லது அவர்களுக்குக் கீழ் இயங்கும் அதிகாரிகளோ ஏதேனும் தவறுகளில் ஈடுபட்டால், அவர்கள் மீது எவ்விதத் தயக்கமும் இன்றி உடனடியாகக் கடுமையான நடவடிக்கை பாயும் என்று அவர் எச்சரித்துள்ளார். நிர்வாகத்தில் எவ்விதக் கறையும் இல்லாத ஒரு ‘சுத்தமான அரசை’ வழங்குவதே தங்களது முக்கிய இலக்கு என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் வெற்று முழக்கங்கள் அல்ல என்றும், மக்கள் பயன்பாட்டுக்காக மட்டுமே அவை அறிவிக்கப்பட்டன என்றும் தெரிவித்த முதல்வர், மக்கள் நலத்திட்டங்களை அமைச்சர்கள் தங்களது துறைகள் மூலம் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் வெறும் ஏட்டளவில் நின்றுவிடாமல், அவை அடித்தட்டு மக்கள் வரை முழுமையாகச் சென்றடைகிறதா என்பதை அமைச்சர்கள் நேரடியாகக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
