அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பென்சில்வேனியா மாகாணத்தின் பிலடெல்பியா (Philadelphia) நகரில் பீட்சா டெலிவரி செய்யச் சென்ற இந்திய இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிலடெல்பியாவின் நார்த் பகுதியில் உள்ள ‘ரேமண்ட் ரோசன் ஹோம்ஸ்’ குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டிற்கு மர்ம நபர்கள் சிலர் பீட்சா ஆர்டர் செய்துள்ளனர். ஆர்டரை டெலிவரி செய்துவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேற முயன்றபோது, அங்கு மறைந்திருந்த கும்பல் அந்த இளைஞரின் தலையில் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளது.
அங்குள்ள கண்காணிப்பு கேமராவில், பாதிக்கப்பட்ட இளைஞர் பீட்சா பையை எடுத்துச் செல்வதும், அவரைத் தொடர்ந்து கறுப்பு உடை அணிந்த இரண்டு மர்ம நபர்கள் பின்தொடர்வதும் பதிவாகியுள்ளது. நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்ட போலீஸார், டெம்பிள் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
துப்பாக்கிச் சூட்டில் பலியான இளைஞர் இந்தியாவின் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த அன்ஷுல் குஞ்சா (28) என்பது தெரியவந்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சைதன்யா பாரதி தொழில்நுட்பக் கழகத்தில் (CBIT) கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்த அன்ஷுல், அமெரிக்காவில் பிசினஸ் அனாலிடிக்ஸ் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பென்சில்வேனியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் ‘டேட்டா வேலிடேஷன் அனலிஸ்ட்’ ஆகவும் பணியாற்றி வந்தார். தனது கூடுதல் செலவுகளுக்காக, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பகுதிநேர வேலையாக பீட்சா டெலிவரி செய்யும் பணியை அவர் செய்து வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அன்ஷுலின் சகோதரி தன்வி கூறுகையில், “என் சகோதரனைக் கொல்வதற்காகவே மர்ம நபர்கள் திட்டமிட்டு வலை விரித்துள்ளனர் . காலி வீட்டிற்கு பீட்சா ஆர்டர் செய்து, அவனது தலையிலேயே மூன்று முறை சுட்டுவிட்டு, உடலை நடுரோட்டில் வீசிச் சென்றுள்ளனர்” என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இந்த கொடூரச் சம்பவம் குறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. அன்ஷுல் குஞ்சாவின் அகால மரணம் தங்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும், அவரது உடலை இந்தியா கொண்டு வரவும், குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ உதவிகளை வழங்கவும் அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
