டெல்லியில் நடைபெறவிருக்கும் ‘இண்டியா’ கூட்டணித் தலைவர்களின் முக்கிய ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை குறிவைத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி அசோகா சாலை மற்றும் நகரின் முக்கிய சந்திப்புகளில் இன்று (திங்கள்கிழமை) காலை திடீரென இந்த போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. 23 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
https://x.com/ANI/status/2063834755100295646?
அந்த போஸ்டர்களில், ராகுல் காந்தியிடம் ஸ்திரத்தன்மை இல்லை என்ற வாசகங்கள் இந்த போஸ்டர்களில் இடம் பெற்றுள்ளன. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சரத் பவார், மம்தா பானர்ஜி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற ‘இண்டியா’ கூட்டணித் தலைவர்கள் பல்வேறு காலகட்டங்களில் பேசிய எதிர்மறையான கருத்துகள் இந்த போஸ்டர்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
https://x.com/ians_india/status/2063823697572700631?
20 ஆண்டுகளாக திமுக தோளில் சவாரி செய்துவிட்டு, தற்போது காங்., முதுகில் குத்திவிட்டது என்ற உதயநிதியின் விமர்சனம் அந்த பேனரில் இடம்பெற்றுள்ளது.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் புகைப்படங்களும் இந்த போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளன.
https://x.com/ians_india/status/2063831289925644493?
சமீபத்திய மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ‘இண்டியா’ கூட்டணிக்குள் சுமுகமான சூழல் இல்லை என்பதை இந்த போஸ்டர் அரசியல் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
தற்போதைய சூழலில், ஆம் ஆத்மி கட்சி இக்கூட்டணியில் இருந்து தற்காலிகமாக விலகியிருக்கிறது. அதேபோல், தமிழகத்தில் காங்கிரஸுடனான உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக திமுகவும் இந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என முடிவெடுத்துள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், 23 கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட்டணி ஒற்றுமையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பாஜவை தேசிய அளவில் எதிர்கொள்வது மற்றும் 2029 மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. இருப்பினும், கூட்டத்திற்கு வெளியேயான இந்த போஸ்டர் யுத்தம் கூட்டணிக்குள் இருக்கும் உள்கட்சி பூசல்களை வெளிப்படுத்தியுள்ளது.
