தேர்வு முறைகேடுகள் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகளை முன்வைத்து, நாடு தழுவிய அளவில் பெரிய அளவிலான மாணவர் மாநாடுகளை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதனை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னின்று வழிநடத்துகிறார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் எம்.பி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, தேர்வு முறைகேடுகள் மற்றும் இளைஞர்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து தனது பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் பெரிய அளவிலான மாணவர் மாநாடுகளை முன்னெடுக்கவுள்ளார். இதன் முதல் மாநாடு ஜூன் 17 அன்று கொடா (கோட்டா)வில் நடைபெறுகிறது.
“ராகுல் காந்தி ஜூன் 17 அன்று கொடாவில் தொடங்கி, ஜூலை 10 அன்று அலகாபாத், ஜூலை 11 அன்று பாட்னா மற்றும் ஜூலை 14 அன்று டெல்லியில் பெரிய அளவிலான மாணவர் மாநாடுகளை நடத்தவுள்ளார்.
தேர்வு முறைகேடுகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள், வேலைவாய்ப்பு தேடுபவர்கள், இளைஞர் அமைப்புகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் இந்த மாநாடு ஒன்றிணைக்கும்.
இந்த நாடு தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, NSUI, இளைஞர் காங்கிரஸ், மாநில காங்கிரஸ் கமிட்டிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் உள்ளூர் அமைப்புகள் மூலம் மாணவர்களை விரிவான அளவில் தொடர்புகொள்ள ராகுல் காந்தியின் அழைப்பை கட்சி மீண்டும் வலியுறுத்தும்.
இளம் இந்தியர்களின் ஆசைகள் ஊழல், திறமையின்மை அல்லது அரசியல் அலட்சியத்திற்கு பலியாகக் கூடாது என்பது ராகுல் காந்தியின் உறுதியான நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த இயக்கம் அரசியல் சார்புகளுக்கு அப்பாற்பட்டு மாணவர்களை ஒன்றிணைக்கும்.
பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், தேர்வு தோல்விகள் மற்றும் வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்கு பொறுப்புக் கேட்கவும் மேடை அமைக்கப்படும்.
முன்பு ராகுல் காந்தி முன்வைத்த கோரிக்கைகளான NEET தேர்வை பரவலாக்குதல், தேர்வுக் கட்டணத்தை நீக்குதல், வினாத்தாள் கசிவு கும்பல்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை, உயர் மட்டத்தில் பொறுப்புக் கேட்பது உள்ளிட்டவற்றை இந்த இயக்கம் தெருக்களுக்கு எடுத்துச் செல்லும். கல்வி அமைச்சரின் ராஜினாமாவும் இதில் அடங்கும் என்று வேணுகோபால் கூறியுள்ளார்.
NEET-UG 2026 தேர்வில் முறைகேடுகள் மற்றும் நிர்வாகத் தவறுகள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ஆம் தேதி மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
