ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், ஒப்பந்த நிபந்தனைகள் காரணமாக அமெரிக்கத் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கப்படலாம் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசியுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்த தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். ஈரான் உடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி முடிவானது அல்ல என்று குறிப்பிட்டார்.
“இது இறுதி ஒப்பந்தம் கிடையாது. இது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே. ஈரான் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ, அல்லது இந்த ஒப்பந்தத்தின் அம்சங்கள் எனக்குப் பிடிக்கவில்லை என்றாலோ, நாங்கள் மீண்டும் தாக்குதலைத் தொடங்கத் தயங்கமாட்டோம்” என்று எச்சரித்தார்.
மேலும், மிகவும் ஆக்ரோஷமான தொனியில் பேசிய அவர், “ஈரான் கடந்த 47 ஆண்டுகளாகத் தவறாகவே நடந்துகொள்கிறது. அவர்கள் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை என்றால், நாங்கள் மீண்டும் குண்டுகளை வீசத் தொடங்குவோம்” என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு, மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றமான சூழலில் இருக்கும் சூழலில், மேலும் அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். டிரம்ப் நிர்வாகம் ஈரானுக்கு விடுத்துள்ள இந்த மிரட்டல், அந்த நாட்டுடனான ராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வரும் என்பது உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
