தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்துள்ள அவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதுடன், தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் தனது சொந்த தயாரிப்பில், சமந்தா நடித்துள்ள ’மா இண்டி பங்காரம்’ என்ற திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. பி.வி.நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழில் ’எங்கள் தங்கம்’ என்ற பெயரில் விரைவில் வெளியாகவுள்ளது.
இதுவரை இல்லாத வகையில் அதிரடி கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். சண்டை காட்சிகளிலும், வீட்டில் அமைதியான அடக்கமான மருமகளாகவும் மிரட்டியிருக்கிறார் சமந்தா. இப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ’மா இண்டி பங்காரம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, படம் உலகளவில் முதல் நாளிலேயே சுமார் ரூ.10.70 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.6.20கோடியும், வெளிநாடுகளில் ரூ.4.50கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
