பண்ருட்டி அருகே செங்கல்சூளை ஒன்றின் கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டிய போது பழங்கால மக்களின் வாழ்வியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பூண்டி மற்றும் வரிஞ்சிப்பாக்கம் கிராம பகுதியின் வயல் பகுதியில் செங்கல் சூளை போடுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது 3 உறை கிணறுகள், பானை ஓடுகள் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர் இளைஞர்கள் தொல்லியல் ஆய்வாளர்கள் தண்டபாணி மற்றும் இம்மானுவேல் ஆகியோருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்த போது, அங்கே சங்க காலத்தை சேர்ந்த சுடுமண் காதணி, கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், கெண்டி மூக்குகள், குறியீடு பானை ஓடு, சுடுமண் குடுவை, செங்கற்கள் மற்றும் 3 உறை கிணறுகள் ஆகியவற்றை கண்டறிந்தனர்.

இதுகுறித்து பேசிய தொல்லியல் ஆய்வாளர்கள் தண்டாயுதபாணி மற்றும் இம்மானுவேல் ஆகியோர், 3 உறை கிணறுகள் 100 மீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே இருந்தது. அதில் ஒன்று முழுமையாக 8 அடுக்குகளை கொண்டதாக இருந்தது. மற்ற இரண்டும் சிதைந்த நிலையில் இருந்தது. அதைத்தொடர்ந்து அப்பகுதியில் கள ஆய்வு செய்த போது அங்கே சங்ககாலத்தை சேர்ந்த சுடுமண் காதணி, கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், கெண்டி மூக்குகள், குறியீடு பானை ஓடு, சுடுமண் குடுவை, செங்கற்கள் ஆகியவற்றை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உறை கிணறுகளை ஆய்வு செய்த போது அவை சங்ககாலத்து மக்கள் குடிநீர்க்காக பயன்படுத்திய உறைகிணறு என்பது தெரிய வந்தது.

இதுபோன்ற உறை கிணறுகள் தமிழகத்தில் கீழடி, பூம்புகார், பட்டறை பெரும்புதூர், அரிக்கமேடு, மாமல்லபுரம் போன்ற இடங்களிலும் விழுப்புரம் & கடலூர் மாவட்டத்தில் திருக்கோவிலூர், பேரங்கியூர், செஞ்சி, திருவாமாத்தூர், கண்டரக்கோட்டை, உளுந்தாம்பட்டு, தளவானூர், அக்கடவல்லி போன்ற பல இடங்களிலும் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆறு மட்டுமல்லாமல் மலட்டாறு பகுதிகளிலும் சங்ககால மக்களின் வாழ்வியல் தடயங்கள் அதிகம் தற்போது கிடைக்கிறது என்று ஆய்வாளர்கள் தண்டாயுதபாணி மற்றும் இம்மானுவேல் கூறினர்.
