அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், அதிருப்தி கோஷ்டியைத் தன் வசம் தக்கவைத்துக் கொள்ளும் உத்தியாகவும், அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி இன்று அதிரடியான புதிய பதவி நியமனங்களை அறிவித்துள்ளார்.
வேலுமணி, நத்தம் விஸ்வநாதனுக்கு முக்கிய பதவி
அதிமுகவில் மிக முக்கியப் பதவிகளான துணைப் பொதுச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் இரா. விசுவநாதன் ஆகியோர் மீண்டும் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளனர். கொங்கு மண்டலத்தின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் வேலுமணிக்கு மீண்டும் கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதன் மூலம் அவரை சமாதானப்படுத்தி உள்ளார் எடப்பாடி.
அதேபோல், முன்னாள் அமைச்சர் வரகூர் அ. அருணாசலம் கழகத்தின் புதிய தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் மிக முக்கியப் பொறுப்பான கழக அமைப்புச் செயலாளர்களாக பி. தங்கமணி, கே.சி. கருப்பணன், எஸ்.பி. சண்முகநாதன், கே.பி. அன்பழகன், ஆர். காமராஜ், கே.சி. வீரமணி, பி. பாலகிருஷ்ண ரெட்டி, கோ. அரி, சி. கிருஷ்ணமுரளி, ஆர்.பி. மருதராஜா மற்றும் பி. சௌந்தர்ராஜன் உள்ளிட்ட 11 மூத்த நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏமாற்றத்திற்குப் பின் நிகழ்ந்த சமரசம்
அண்மையில் அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பிய நிகழ்வுகளின் தொடர்ச்சியாகவே இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் ஒரு குரூப் அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கொடி பிடித்தனர். மேலும், அவர்கள் தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசுக்குத் தங்களின் மறைமுக ஆதரவையும் சட்டசபையில் தெரிவித்தனர்.
ஆனால், தவெக அமைச்சரவையில் தங்களுக்கு எதிர்பார்த்தபடி எந்தவொரு இடமும் கிடைக்காததால், வேலுமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் ஏமாற்றமடைந்தனர். தவெக தரப்பில் இருந்து எந்தவொரு சாதகமான சமிக்ஞையும் வராத நிலையில், வேறு வழியின்றி மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் அவர்கள் சமரசமாகினர்.
இதனையடுத்து தங்களை நோக்கி நகர்ந்த அதிருப்திக் குழுவை அப்படியே வளைத்துப்போட்டு, கட்சியை உடைப்பில் இருந்து காப்பாற்றும் நோக்கிலேயே, அதிருப்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இந்த பதவிகளை வழங்கி உள்ளதாக தெரிகிறது.
