கவின் நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் தொடக்க விழாவில், திரைப்படத் தயாரிப்பாளர் ‘கலைப்புலி‘ எஸ்.தாணு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, ஆன்ட்ரூ லூயிஸ் உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

‘தண்டட்டி‘ படத்தின் மூலம் தனித்துவமான இயக்கத்தால் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் ராம் சங்கையா இந்தப் படத்தை இயக்குகிறார். கவின் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஜி.மதன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள எம்.கதிரவன் மதி கலை இயக்கத்தை கவனிக்கிறார்.
கிராமியப் பின்னணியில் உருவாகும் இந்தப் படம், கவினின் திரைப் பயணத்தில் ஒரு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1987ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல் நடித்த படத்தின் தலைப்பு ‘பேர் சொல்லும் பிள்ளை’ என்பது குறிப்பிடத்தக்கது.
