வெனிசுலாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சக்தி வாய்ந்த 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு 7.1, 7.5 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால், வெனிசுலா நகரமே உருக்குலைந்து போயுள்ளது.
தலைநகர் கராகசில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாகுவைரா நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகர் உட்பட நாடு முழுவதையும் புரட்டிப் போட்டுள்ளது. பல அடுக்குமாடி கட்டடங்கள் அடியோடு இடிந்து விழுந்துள்ளன. இந்த இடிபாடுகளில் சிக்கி பலர் மாயமாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அதேப் போல நாட்டின் முக்கிய சர்வதேச நிலையமான வெனிசுலாவின் மைகுயெட்டியா விமான நிலையம் சேதமடைந்து மூடப்பட்டுள்ளது. சாலைகள் இரண்டாக பிளந்து, சலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கி சேதம் அடைந்தன. பொதுமக்கள் பலர் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
பேரழிவின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அந்நாட்டின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தேசிய அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனிடையே வெனிசுலா அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், அந்நாட்டுக்கு தேவைப்படும் உதவிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் கிரிஸ்டோபர் லண்டாவ் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளான பிரேசில், எல் சல்வடார், கியூபா, டொமினிகன் குடியரசு உள்ளிட்டவை உடனடியாக பேரிடர்கால மீட்பு உதவிகளை அனுப்பி வைத்துள்ளன. இந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை 920 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 3,360 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், 50,000 பேர் மாயமாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால் இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என கணிக்கப்படுகிறது.
