பெங்களூருவில் தந்தை, தாய் மற்றும் தங்கையை கொலை செய்த இளம்பெண் ஸ்வேதா புதுச்சேரியில் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த அவரது காதலன் கென்னத்தையும் புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியரான ஸ்வேதா, ஆந்திராவைச் சேர்ந்த கென்னத்தை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒன்றாக வசித்து வந்தனர். இதற்கிடையில், கிரெடிட் கார்டு மூலம் ரூ.30 லட்சம் வரை கடன் வாங்கிய ஸ்வேதா, அந்த கடனை அடைப்பதற்காக பெற்றோரிடம் சொத்தில் தனது பங்கை கேட்டதாகவும், அவர்கள் மறுத்ததால் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி, தனது தாய், தந்தை மற்றும் தங்கையை தனித்தனியாக அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்து, காதலன் கென்னத்துடன் இணைந்து மூவரையும் கொலை செய்துவிட்டு இருவரும் தலைமறைவாகினர். இந்த சம்பவம் கர்நாடகா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், புதுச்சேரியில் ரோந்து பணியில் இருந்த உருளையன்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஸ்வேதாவை பிடித்து விசாரித்தபோது, அவர் பெங்களூரு மூவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை பெங்களூரு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த கென்னத் புதுச்சேரி அண்ணா நகரில் உள்ள ஒரு மதுபாரில் இருந்து வெளியே வந்தபோது போலீசார் மடக்கிப் பிடித்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் ல்ெலும் வழியில் பைக்கில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற கென்னத்தை, கீழே விழுந்து காயமடைந்த நிலையிலும் போலீஸ்காரர் ராமலிங்கம் விடாமுயற்சியுடன் விரட்டிப் பிடித்தார். பின்னர் கென்னத்திடமிருந்து பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, நள்ளிரவில் பெங்களூரு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
