இஸ்லாமைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையை ரத்து செய்த மதுரை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, தவெக அரசின் சட்ட நடவடிக்கைகள் குறித்து திமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அ. சுபேர்கான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்லாமுக்கு மதம் மாறிய பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வழங்கிய 09.03.2024-ஆம் தேதி வெளியிடப்பட்ட G.O.(Ms.) No.31-ஐ நீதிமன்றம் ரத்து செய்திருப்பது சமூகநீதிக்குப் பெரிய பின்னடைவு என்றும், இந்த வழக்கில் தவெக அரசு எடுத்த மெத்தனமான அணுகுமுறை, பாஜகவின் ‘மதமாற்ற தடைச் சட்ட’ அரசியல் அஜெண்டாவுக்கு மறைமுக ஆதரவாக இருப்பதாக சந்தேகம் எழுப்புவதாகவும் கூறியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவு மதச் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. ஆனால், “இஸ்லாமுக்கு மதம் மாறியவர் ஒரு முஸ்லிம் மட்டுமே; அவருக்குப் பழைய சாதி அடையாளம் இல்லை” என்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பு, சமூகப் பின்னடைவைப் புறக்கணிப்பதாக சுபேர்கான் குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும், அரசாணையை பாதுகாக்க தேவையான வரலாற்றுத் தரவுகள், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரைகள் உள்ளிட்ட ஆதாரங்களை அரசு நீதிமன்றத்தில் முழுமையாக தாக்கல் செய்யவில்லை என்றும், இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய முந்தைய தீர்ப்புகளுக்கு மாறான கருத்து வெளியானபோது, வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்ற வலியுறுத்த அரசுத் தரப்பு தவறிவிட்டதாகவும் அவர் கூறி உள்ளார்.
இந்த தீர்ப்பு, மதம் மாறினால் இடஒதுக்கீடு பறிக்கப்படும் என்ற அச்சத்தை உருவாக்கி, மதச் சுதந்திரத்தை மறைமுகமாகக் கட்டுப்படுத்தும் பாஜக அரசியல் நோக்கத்துக்கு வழிவகுக்கும் என குற்றம்சாட்டி உள்ள சுபேர்கான், சமூகநீதியையும் சிறுபான்மையினரின் உரிமைகளையும் பாதுகாக்கும் போராட்டத்தை திமுக தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
