சென்னை மாதவரம் பகுதியில் இன்று காலை ஓட்டுநர் பயிற்சி கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாதவரத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி ஒன்றில் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல இன்றும் பயிற்சி வகுப்பு நடத்த, ஜி.என்.டி. சாலையில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரி அருகே காரை ஓட்டிச் சென்றார். அவருடன் பயிற்சி பெறுவதற்காக இரண்டு பெண்கள் காரில் இருந்தனர்.
பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, காரின் எஞ்சின் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியுள்ளது. இதைக் கவனித்த பயிற்சியாளர் சண்முகம், உடனடியாக சுதாரித்து காரை ஓரமாக நிறுத்தி, உள்ளே இருந்தவர்களைக் கீழே இறக்கினார். அவர்கள் காரை விட்டு இறங்கிச் சென்ற சில நொடிகளிலேயே, காரின் முன் பகுதியில் இருந்து தீ மளமளவெனப் பற்றி மற்ற இடங்களுக்கும் பரவியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடித் தீயை அணைத்தனர். எனினும், தீயின் வேகம் அதிகமாக இருந்ததால், கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. இது குறித்து மாதவரம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, காரில் தீ விபத்து ஏற்படக் காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
