குற்ற வழக்குகளில் தடயவியல் மற்றும் உடற்கூறு ஆய்வுகளுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஊத்தங்குடியை சேர்ந்த வழக்கறிஞர் அருண் சாமிநாதன் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், அரசு மருத்துவமனைகளில் தடயவியல் மற்றும் உடற்கூறு ஆய்வுகள் நடத்துவதில் தொடர்ச்சியாக முறைகேடுகள் நடந்து வருவதாகவும், இது குற்ற வழக்கு புலன் விசாரணையிலும், மருத்துவ ஆதாரங்களை பாதுகாப்பதிலும் பிரச்சனையை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் அறிவியல் அலுவலர் நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை 2020ஆம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்திருந்தும், அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எதையும் அரசு மேற்கொள்ளவில்லை என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மருத்துவ ஆதாரங்கள் சேகரிப்பதில் பல குறைபாடுகள் உள்ளன; உடற்கூராய்வுக்கு பிறகு தவறான உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த சம்பவங்களும் நடந்துள்ளன; இன்னும் சில நிகழ்வுகளில் மரணமடைந்து விட்டதாக சான்றிதழ் அளிக்கப்பட்ட நபர்கள், பின்னர் உயிருடனும் கண்டுபிடிக்ப்பட்டுள்ளார்கள் என்று மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை பிணவறைகளில் அடையாளம் காணப்படாத உடல்கள் ஆண்டு கணக்கில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். தற்போது வரை தமிழநாட்டில் தடயவியல், உடற்கூராய்வு நடைமுறைகளுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தடயவியல் ஆதாரங்கள் , குற்ற நீதி பரிபாலனத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன; மருத்துவ ஆதாரங்களை சேகரிப்பதிலும், பாதுகாப்பதிலும் குறைபாடுகள் எழுந்தால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதால், குற்ற வழக்குகளில் தடயவியல் மற்றும் உடற்கூறு ஆய்வுகளுக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, வழக்கு குறித்து மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
