செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் போர்வெல் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதியில் குடிநீருக்காக கை போர்வெல் கிணறு தோண்டுபணி நடைபெற்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக போர்வெல்லின் கம்பி, அருகே சென்ற 11 கிலோ வாட் மின் கம்பியின் மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த மின்சாரம் போர்வெல் வேலை செய்து கொண்டிருந்த கல்பாக்கம் அடுத்த நெய் குப்பி கிராமத்தைச் சேர்ந்த பிரபு, மாமல்லபுரம் அடுத்த வசந்தபுரி பகுதியைச் சேர்ந்த பாலாஜி, மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த பாட்ஷா, கடம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோரை தாக்கியதில் நால்வரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். உடன் பணிபுரிந்த காரணை கிராமத்தைச் சேர்ந்த பகவான் என்பவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த மாமல்லபுரம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
