கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையில் குட்கா வழக்கில் கைதான விசாரணை கைதி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 9-ஆம் தேதி தென் தாமரைக்குளம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறி, சபரி வர்மன் (35) என்பவரை தென் தாமரைக்குளம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 200 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சபரி வர்மன், நீதிமன்ற உத்தரவின்படி நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று காலை அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இருப்பினும், உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே உறுதி செய்யப்படும். இந்த சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் போலீசார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விசாரணை கைதி சபரிவர்மன் திடீர் மரணம் அடைந்ததை தொடர்ந்து மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மருத்துவமனை வளாகத்தில் பதட்டமான சூழல் நிலவி வருவதை தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரை பொறுமை காக்க வேண்டும் என போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
