அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்துள்ளது. இரு நாடுகளும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில், உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா-ஈரான் இடையேயான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் ஈரானில் 140-க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு பதிலடியாக, ஈரான் பஹ்ரைன், குவைத், கத்தார், ஜோர்டான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க நலன்களை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது.
ஹார்முஸ் நீரிணை மூடல்
உலக கடல்வழி கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மாலுமிகள் கடலில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பதற்றத்தின் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4.7% உயர்ந்து பேரலுக்கு 79.59 டாலராக உயர்ந்துள்ளது.
ஆசிய பங்குச் சந்தைகளில் சரிவு
போர் பதற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் அச்சமடைந்த நிலையில், ஆசிய பங்குச் சந்தைகளும் சரிவைச் சந்தித்துள்ளன. குறிப்பாக தென் கொரியாவின் SK Hynix பங்கு 15% மற்றும் Samsung Electronics பங்கு 10% வரை வீழ்ச்சியடைந்தன. ஜப்பான் மற்றும் சீன பங்குச் சந்தைகளும் சுமார் 2% வரை சரிந்தன.
இதற்கிடையில், ஓமன், கத்தார் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இரு தரப்பையும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
