தமிழகத்தில் ஜூலை 17-ம் தேதி ஆடி மாதம் பிறக்கவுள்ள நிலையில், பல ஜவுளிக் கடைகள் ஏற்கெனவே 15 நாட்களுக்கு முன்பாகவே ஆடித் தள்ளுபடி விற்பனையை தொடங்கிவிட்டன. இந்தச் சீசன் சலுகை இன்று தமிழகம் முழுவதும் பிரபலமாக இருந்தாலும், அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது.
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. ஆடிப் பெருக்கு, அம்மன் கோயில் திருவிழாக்கள் என பல விழாக்கள் இம்மாதத்தில் நடைபெறும். ஆனால், திருமணம், காதுகுத்து, வீடு கட்டுதல் போன்ற சுபகாரியங்கள் இந்த மாதத்தில் தவிர்க்கப்படும். புதுமணத் தம்பதிகளைப் பிரித்து வைக்கும் சம்பிரதாயங்களும் உண்டு. இதனால் ஜவுளி, நகை உள்ளிட்ட விற்பனை பெருமளவில் குறையும்.
முந்தைய காலங்களில் விவசாயமே முக்கியத் தொழிலாக இருந்தது. “ஆடிப் பட்டம் தேடி விதை” எனும் பழமொழி இதைச் சுட்டும். ஆடி மாதத்தில் நெல் நடவு, கரும்பு நடவு போன்ற பணிகளுக்காக விவசாயிகள் தங்கள் கையிருப்பை முழுவதுமாகச் செலவழித்துவிடுவர். கடன் வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், ஜவுளிக் கடை உரிமையாளர்களுக்கு ஆடி மாதம் பெரும் சவாலாக இருந்தது. சம்பளம் கொடுக்கக் கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையை மாற்ற வேண்டும் என வியூகம் வகுத்தனர் கடை உரிமையாளர்கள். ஆண்டுதோறும் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்த பழைய ஸ்டாக் துணிகளை “ஆடிக் கழிவு” எனப் பெயரிட்டு, சற்றுக் குறைந்த லாபத்தில் தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய முடிவு செய்தனர். இதைப் பொதுமக்களிடையே விளம்பரப்படுத்தினர்.
எதிர்பார்த்ததை விட பெரும் வரவேற்பு கிடைத்தது. மக்கள் தள்ளுபடி விலையில் துணி வாங்க கடைகளுக்கு ஆர்வமுடன் வந்தனர். ஒரே நேரத்தில் இரண்டு நோக்கங்கள் நிறைவேறின. ஒன்று, தேங்கிய ஸ்டாக் காலியானது. இரண்டாவது, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு புதிய ஸ்டாக் வாங்க பணம் கிடைத்தது.
இன்று ஆடித் தள்ளுபடி 5 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை விரிவடைந்துள்ளது. பெருநகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை அனைத்து ஜவுளிக் கடைகளிலும் இந்தச் சலுகை ஜோராக நடைபெறுகிறது. நவீன காலத்தில் கடன் அட்டைகள், EMI வசதிகள் இருந்தாலும், ஆடித் தள்ளுபடியின் ஈர்ப்பு குறையவில்லை.
இந்தத் தள்ளுபடி விற்பனை, பொருளாதார ரீதியாக ஜவுளித் தொழிலுக்கு உயிர் கொடுத்தது மட்டுமல்லாமல், நுகர்வோருக்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆடி மாதத்தின் பாரம்பரியத்துடன், வணிக யுக்தியும் இணைந்து உருவான இந்தத் தள்ளுபடி பாரம்பரியம், இன்றும் தமிழக வணிக உலகில் தொடர்கிறது.
