உலகின் பெரும் செல்வம் கொண்ட கோயில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோயிலில், நேற்று (ஜூலை 15-ம் தேதி) ஒரே நாளில் சுமார் 96.98 கோடி ரூபாய் நன்கொடையாகக் குவிந்துள்ளது. இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பின்னால் ஒரு முக்கியக் காரணம் உள்ளது.
கோயிலின் நன்கொடையாளர் கொள்கையில் புதிய மாற்றங்களைச் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்திருந்தது. ஜூலை 15 நள்ளிரவு முதல் இந்தப் புதிய விதிகள் அமலுக்கு வரவிருந்ததால், பழைய சலுகைகளைப் பெறுவதற்காக கடைசி நேரமாகப் பலரும் போட்டி போட்டுக்கொண்டு நன்கொடை வழங்கியுள்ளனர். இதனால் தான் இந்த திடீர் பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளது.
புதிய கொள்கையின் முக்கிய மாற்றங்கள்: இதுவரை நன்கொடையாளர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், புதிய கொள்கையின்படி, இனி தனிநபர்களுக்கு 20 ஆண்டுகளும், நிறுவனங்கள் அல்லது அறக்கட்டளைகளுக்கு 15 ஆண்டுகளும் மட்டுமே சலுகைகள் செல்லுபடியாகும்.
ஆன்லைன் முறை: நன்கொடையாளர்களுக்கான தரிசனங்கள் இனி முழுமையாக ‘ஆன்லைன் நன்கொடையாளர் மேலாண்மை அமைப்பு’ (Online Donor Management System) மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும். இது மனிதத் தலையீடுகளைத் தவிர்த்து வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.
சலுகைகள் மாற்றம்: விஐபி தரிசனம், சுப்ரபாத சேவை, தங்குமிடம் மற்றும் இதர சலுகைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த புதிய விதிகள் ஏற்கனவே நன்கொடை வழங்கியவர்களுக்குப் பொருந்தாது. பழைய நன்கொடையாளர்கள் தொடர்ந்து பழைய சலுகைகளைப் பெறலாம். புதிய விதிகள் ஜூலை 15 நள்ளிரவுக்குப் பிறகு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், பழைய சலுகையைத் தவறவிடக்கூடாது என்பதற்காகவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் முண்டியடித்து நன்கொடை அளித்துள்ளனர்.
ஜூலை 15 அன்று மட்டும் சுமார் 2,460 பேர் நன்கொடை அளித்துள்ளனர். இதில் இரண்டு பக்தர்கள் தலா ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை வழங்கியுள்ளனர். மேலும் 1,212 பேர் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலும், 1,246 பேர் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரையிலும் நன்கொடை அளித்தனர். தேவஸ்தான வாரியத்தின் கூற்றுப்படி, சாதாரண பக்தர்களுக்கு அதிக தரிசன வாய்ப்புகளை வழங்கவும், நிர்வாகத்தில் சீரான தன்மையைக் கொண்டு வரவும் இந்த மாற்றங்கள் அவசியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பணக்காரக் கோயில்களில் ஒன்றான இங்கு, சமீப காலங்களில் நன்கொடையாளர்களின் எண்ணிக்கையில் நிலையான உயர்வு காணப்படுகிறது. இக்கோயிலின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 3.38 லட்சம் கோடியாகும் – இது பல சிறிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகும். 2025-26 ஆம் ஆண்டில், உண்டியல் காணிக்கை வருவாய் ரூ. 1,738 கோடியைத் தாண்டியது; இது நாளொன்றுக்கு சராசரியாக ரூ. 4.75 கோடிக்குச் சமமாகும்.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 1,97,888 பதிவு செய்யப்பட்ட நன்கொடையாளர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 1.5 லட்சம் பேர் ரூ. 1 லட்சம் அல்லது அதற்கு மேல் நன்கொடை அளித்துள்ளனர்; சுமார் 22,000 பேர் ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை வழங்கியுள்ளனர். கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வாரியம், நன்கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாகச் சிறப்புச் சலுகை கொள்கையை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
“கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ரூ. 10 லட்சம் நன்கொடை அளித்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3,000 அதிகரித்துள்ளது… நன்கொடை நிர்வாகத்தில் அதிக வெளிப்படைத்தன்மையையும் சீரான தன்மையையும் கொண்டு வருவதே இந்த மாற்றங்களின் நோக்கம்,” என்று தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு கூறியதாக தனியார் செய்தி சேனல் தெரிவித்துள்ளது.
