நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மாணவர் அமைப்புகள் சார்பில் மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியானதை அடுத்து, அங்கு பொதுமக்கள் செல்வதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையின் அனைத்து முக்கிய நுழைவு வாயில்களிலும் காவல்துறையினர் பேரிகேடுகளை அமைத்துத் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அப்பகுதிக்குச் செல்லும் அனைத்து சாலைகளிலும் தீவிர வாகனச் சோதனையும் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விடுமுறை மற்றும் வழக்கமான நடைபயிற்சிக்காக மெரினாவிற்கு வந்த பொதுமக்களும், வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் கடற்கரைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மெரினா முழுவதும் ஏராளமான காவல்துறையினர், அதிவிரைவுப் படையினர் மற்றும் ரோந்து வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன.
கடந்த காலப் போராட்டங்களைப் போல எவ்விதமான மக்கள் திரளும் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் போராட்ட அழைப்புகள் மற்றும் தகவல்களையும் சைபர் கிரைப் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
