சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் முதலமைச்சர் மற்றும் அவரது செயலாளர்களின் அறைகள் அமைய உள்ளன. 10-வது தளத்தில் தற்போது செயல்பட்டு வரும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அலுவலகப் பிரிவுகள், வரவு செலவு பிரிவுகள், பொருட்காட்சி அனுமதிப் பிரிவு, முதல்வரின் சமூக, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியவை தரைத்தளம், 2-ம் தளம் மற்றும் சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்திற்கு தற்காலிகமாக மாற்றப்படுகின்றன. சுற்றுலாத் துறையின் எழுது பொருட்கள் அறை, 9-வது தளத்திற்கு மாற்றப்படுகிறது.
நாமக்கல் கவிஞர் மாளிகையின் 1, 3, 5, 7 மற்றும் 8 ஆகிய தளங்களில் உள்ள கூட்ட அரங்குகளை உடனடியாக பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றப்படும் புதிய அலுவலகங்களில் உடனடியாகப் பணிகளைத் தொடர ஏதுவாக மேஜை, நாற்காலிகள், மின்சார வசதி, இணையதள வசதி மற்றும் தொலைபேசி தொடர்புகளை உடனடியாக ஏற்படுத்தித் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
