சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா அலுவலக நுழைவாயிலில் ஒட்டப்பட்டுள்ள ஒரு அறிவிப்புப் பலகை, அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. “தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுடன் மட்டுமே வர வேண்டும். பணம் வைத்திருப்பவர்களுக்கு உள்ளே அனுமதி கிடையாது” என்ற இந்த நோட்டீஸ், லஞ்சத்தைத் தடுக்கும் நோக்கில் வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரால் வெளியிடப்பட்டுள்ளது.
பட்டா மாறுதல், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், நில அளவை உள்ளிட்ட அன்றாடப் பணிகளுக்காக அலுவலகம் வரும் மக்களிடம் சிலர் லஞ்சம் எதிர்பார்ப்பதும், இடைத்தரகர்கள் நடமாடுவதும் நீண்டகாலமாக புகார்களுக்குக் காரணமாக இருந்தன. இதைக் கட்டுப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அறிவிப்பைப் பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்துள்ளனர். சமூக ஆர்வலர்கள் இதை “துணிச்சலான நடவடிக்கை” எனப் பாராட்டியுள்ளனர். அதேநேரம், இது வெறும் கண் துடைப்பாக இல்லாமல் உண்மையில் செயல்படுத்தப்பட்டால் மட்டுமே பயன் உண்டாகும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த பிறகு, முதல்வர் விஜய் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக கடும் நிலைபாட்டை வெளிப்படுத்தி வருகிறார். சட்டசபையில் “மக்கள் பணத்தைத் தொட மாட்டோம்; தொட்டவர்களையும் விட மாட்டோம்” என உறுதியளித்த அவர், கரூர் உள்ளிட்ட இடங்களில் “லஞ்சம் கேட்பவர்களிடம் என் பெயரைச் சொல்லுங்கள்” என மக்களை ஊக்குவித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை மாநிலம் முழுவதும் தாலுகா அலுவலகங்களில் சோதனைகளைத் தீவிரப்படுத்தியது. சில நாட்களுக்கு முன் 35 தாலுகா அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.13.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் “கையில் பணம் வைக்கவும் முடியவில்லை, ஜிபேயில் அனுப்பவும் முடியவில்லை” என்ற புகார்களும் எழுந்தன.
இத்தகைய சூழலில் மானாமதுரை வட்டாட்சியரின் இந்த நடவடிக்கை, ஆட்சியின் லஞ்ச எதிர்ப்புக் கொள்கையை களத்தில் செயல்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. சாமானிய மக்கள் மத்தியில் அரசு நிர்வாகம் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் கருதப்படுகிறது. இந்த அறிவிப்பின் புகைப்படம் சமூக ஊடகங்களில் விரைவாகப் பரவி டிரெண்ட் ஆகியுள்ளது.
