சிறுபான்மை நிறுவனங்களின் சொத்துகளை அபகரிக்க சூழ்ச்சி செய்யும் ஒன்றிய அரசின், வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்காற்றுச் சட்டத்திற்கு (FCRA 2026 ) எதிராக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தியாவின் நாடாளுமன்றத்தில் 2026 மார்ச் 25 அன்று அறிமுகப்படுத்திய FCRA 2026 ஒழுங்காற்றுச் சட்டத்தின்படி, ஒரு நிறுவனத்தின் புதுப்பித்தல் மறுக்கப்பட்டாலோ, உரிய காலத்தில் விண்ணப்பிக்கத் தவறினாலோ நிறுவனப் பதிவு ரத்தாகிவிடும்.
பதிவு ரத்து செய்யப்பட்டால் அந்த நிறுவனத்தின் சொத்துகளும் அதன் கணக்கில் உள்ள பணமும் அரசு வசமாகும். அது மட்டுமன்றி அந்தச் சொத்துகளை அதிலிருந்து வரும் பணம் அரசின் பொதுக்கணக்கிற்கு மாற்றப்பட்டுவிடும்.
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி இல்லங்கள், மசூதிகள், கோயில்கள் ஆகியன அரசு கட்டுப்பாட்டிற்குள் செல்லும். மாநில அரசுக்கு, இதில் தலையீடு செய்ய வாய்ப்பு இல்லை

சிறுபான்மை அமைப்புகள் நடத்தக்கூடிய நிறுவனங்களிடமிருந்தும், பெரும்பாலும் வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாளிகள், சர்வதேச நிறுவனங்களிடமிருந்தும், நிதியுதவி பெற்று சேவை செய்கின்றனர். இந்தச் சட்டம் மூலமாக வெளிநாடுகளிலிருந்து வரும் நிதி தடைபடும் சூழல் உருவாகும். பல லட்சக்கணக்கான தன்னார்வ வேலை வாய்ப்புகளும் பறிபோகும் நிலை உள்ளது.
சட்ட ரீதியான அதிகாரம், ஒன்றிய அரசிடம் மட்டுமே குவிக்கப்படுவது சுதந்திரமான செயல்பாட்டிற்கும் சிறுபான்மையினர் நடத்தக்கூடிய நிறுவனங்களின் தன்னாட்சி உரிமைக்கும், சொத்து உரிமைக்கும், வழிபாட்டு உரிமைக்கும் கேடு தரும்.
வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை விடவும் அதிகமான பாதிப்பை, சிறுபான்மை சமூகத்திற்கு மட்டுமன்றி, அதனால் பயன்பெறும் பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த எளிய மக்களுக்கும், இச்சட்டம் ஏற்படுத்தும்.
ஆனால், இதுவரை எந்தச் சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்படாத ஆர். எஸ். எஸ்., நம் நாட்டிலேயே அதிகஅளவிலான, பல லட்சக்கணக்கான ரூபாய் அந்நிய நிதி பெற்று, இயங்கி வரும் நிலையில், இச்சட்டம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் கட்டுப்படுத்தாது என்பது அரசின் இரட்டை நிலைப்பாட்டைத் தெளிவாக்குகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலின் ஒரு பகுதி, இந்தச் சட்டத்திருத்தம் என்பது வெளிப்படையானது.
இந்தத் திருத்தச்சட்டத்தை எதிர்த்து தூத்துக்குடி மறை மாவட்டம் பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் ஒன்றிய அரசுக்கு எதிரான முழக்கங்களை முன்வைத்தனர்.
