சேலத்தில் மாணவ மாணவிகளை கல்லூரிகளில் சேர்த்து விடுவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தனியார் வழிகாட்டுதல் மைய உரிமையாளரை போலீசார் சிறைப்பிடித்துள்ளனர்.
சேலம் மாநகர் மூன்று ரோடு சுந்தரம் காலனி பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் ஏர்னெஸ்ட் வழிகாட்டுதல் உயர்கல்வி மையம் என்பதை நடத்தி வருகிறார். இந்த மையத்தில் பதிவு செய்யும் மாணவ மாணவிகளை நல்ல கல்லூரிகளில் சேர்த்து விடுவதாக கூறி வருகிறார். அதற்காக மாணவ மாணவிகள் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அதற்காக அவர்கள் தேர்ச்சி பெற்ற உண்மையான சான்றிதழ்களை கொடுக்க வேண்டும் எனச் சொல்வதாக தெரிகிறது.
இதனை நம்பி சேலம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பதிவு செய்து தங்களது சான்றிதழ்களை வழங்கி உள்ளனர். இதில் அந்த மாணவிகளுக்கு நல்ல கல்லூரிகள் மற்றும் தான் கேட்ட குரூப் கிடைக்காத பட்சத்தில் அந்த சான்றிதழை பெறும் பொழுது அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறுவதாக தெரிகிறது.
சில நேரத்தில் தான் கேட்ட கல்லூரியும் தான் கேட்ட குரூப்பும் கிடைத்துவிட்டால் அதற்கும் பணம் செலுத்த வேண்டும் என பல்வேறு பண மோசடிகளை செய்ததாக தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அவர்களை சந்தித்து புகார் அளித்தனர்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்த சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எல்லப்பனுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதன் பேரில் எல்லப்பன் சேலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் மீனாம்பிகை தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து தனியார் வழிகாட்டுதல் மைய உரிமையாளர் விஜயகுமாரை பள்ளப்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.
