செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர் திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி வருவதால் பொதுமக்களின் நிம்மதி கேள்விக் குறியாகியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் நள்ளிரவு நேரத்தில் இரண்டு இளைஞர் வீடுகள் மற்றும் கடைகளுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த இரும்புப் பொருட்களைத் துணிச்சலாகத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
தொடரும் இந்த திருட்டுச் சம்பவங்களால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள், சிசிடிவி காட்சிகளுடன் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்துள்ளனர். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இரும்புப் பொருட்களைத் திருடும் மர்ம நபர்களை விரைவில் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
