தேனி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென பற்றி எரியும் காட்டுத்தீயால் பல நூறு ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ள சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தேனி வீரப்ப அய்யனார் கோயிலுக்கு மேல்புறமுள்ள வனப்பகுதியில் நேற்று மாலையில் சிறிய அளவில் தொடங்கிய இந்தத் தீ, இரவு முழுவதும் மளமளவெனப் பரவி தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் அப்பகுதியில் தீ எரிந்து வருவதுடன், மலை உச்சிப் பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளிக்கிறது.
மலைப் பகுதி மிகவும் உயரமானதாக இருப்பதாலும், அப்பகுதியில் பலத்த காற்று வீசி வருவதாலும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினருக்குக் கடும் சவால்களும் சிரமங்களும் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த விபத்தின் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையின் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் இருந்த விலைமதிப்பற்ற மரங்கள், அரிய வகை மூலிகைச் செடிகள் மற்றும் தாவரங்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளன. மேலும், இப்பகுதியில் வசிக்கும் சிறுத்தைகள், காட்டெருமைகள், பறவைகள் மற்றும் பல்வேறு சிறிய விலங்கினங்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடமாறும் சூழலும், கடுமையான பாதிப்புக்குள்ளாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
சமூக விரோதிகள் சிலர் இதுபோன்று காடுகளில் தீ வைத்துவிட்டுச் செல்வதே இதுபோன்ற பேரழிவுகளுக்கு முக்கியக் காரணம் என்று குற்றஞ்சாட்டும் வன ஆர்வலர்கள், வனத்துறையினர் இதுபோன்ற செயல்களைத் தீவிரமாகக் கண்காணித்து மேற்குத் தொடர்ச்சி மலையின் வளங்களைப் பாதுகாக்க உரிய மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
