தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய பாமக உறுப்பினர் கணேஷ் குமார், மாநிலத்தில் பல மதுக்கடைகள் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இன்னும் சட்டவிரோதமாக இயங்கி வருவதாகக் குற்றம்சாட்டியதுடன், ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்திற்கும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் விக்னேஷ், ஆன்லைன் வாயிலாக மதுபானங்களை முன்பதிவு செய்ய மட்டுமே வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசிய கணேஷ் குமார், ஆண்டுக்கு ஆறு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை எப்போது வழங்கப்படும் என்று மக்கள் தன்னிடம் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருவதாகத் தெரிவித்தார். மேலும், அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குப் புதிய பேருந்துகள் வாங்குவது தொடர்பாக பட்ஜெட்டில் எந்தவொரு அறிவிப்பும் இடம்பெறவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாநிலத்தின் நிதிநிலைமை சீராக இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று பட்ஜெட்டின் போது அரசு குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அப்படியானால் முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் காலம் தாழ்த்தப்படுமா என்று கேள்வி எழுப்பினார். எனவே, அப்படி தாமதமின்றி, படித்த மற்றும் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கான நிதியுதவி, மாதாந்திரத் தொகை மற்றும் சிலிண்டர் விநியோகம் உள்ளிட்ட அனைத்து முக்கிய வாக்குறுதிகளையும் அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
