திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்படி பிரிவு வருகே தனபால் என்பவர் டீ கடை நடத்தி வருகிறார். இங்கு நேற்று (20.05.25) இரவு 11 மணி அளவில், அம்பாத்துறையைச் சேர்ந்த சின்னபாண்டி என்பவர் சிகரெட் வாங்கியுள்ளார். அதற்கான பணத்தை கூகுள் பே-ல் செலுத்தியதாக கூறப்படுகிறது.
பணம் அனுப்பியது தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக சின்னபாண்டி தனது காரில் இருந்த அரிவாளை எடுத்து தனபாலை தாக்க முற்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கடையின் உரிமையாளர் தனபால், மற்றும் அவரது கடையில் டீ மாஸ்டராக இருந்த முருகேசன் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் வாழைக்காய் பஜ்ஜி போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த கட்டையை வைத்து தனபால் சின்னபாண்டியை தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்தார். அருகேயிருந்தவர்கள் சின்னபாண்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக சின்னாளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார், சின்னப்பாண்டி எடுத்து வந்த அரிவாள், கார் மற்றும் வாழைக்காய் பஜ்ஜி போட பயன்படுத்தும் கட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
