பொதுத்தேர்வுகளில் முறைகேடுகள் செய்தால் கடும் தண்டனை தரும் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார்.
மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு மசோதா அண்மையில் நிறைவேறியது. வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ.10 கோடி வரை அபராதம், குற்றவாளிகளுக்கு சொந்தமான சொத்துகள் பறிமுதல் போன்ற கடும் தண்டனைகள் வழங்கும் அம்சங்கள் இந்த திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு விரைவான விசாரணை நடத்த ஒவ்வொரு மாநிலத்திலும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, திரவுபதி முர்மு முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார். இதனை அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலமாக மத்திய சட்ட அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
