இந்தியப் பொதுவாழ்வில் ஊழல் என்பது அரசியல் களத்தைத் தீர்மானிக்கும் முதன்மை சக்தியாக இருந்த காலம் மெல்ல மறைந்து, அது சமூகத்தால் பழகிப்போன, ஒரு ‘இயல்பான’ விஷயமாக மாறிவிட்டதா என்ற தார்மீகக் கேள்வி தற்போதைய சூழலில் வலுவாக எழுந்துள்ளது.
தேர்வுத்தாள் கசிவுகள், மெகா உள்கட்டமைப்பு முறைகேடுகள் எனத் தேசிய அளவில் புயலைக் கிளப்பும் ஊழல் புகார்களுக்கு மத்தியிலும், அவை தேர்தல் களங்களில் பெரியதொரு மக்கள் அலையையோ அல்லது ஆட்சி மாற்றத்தையோ உருவாக்குவதில்லை என்ற எதார்த்தம் அதிர்ச்சியளிக்கிறது. ஊழலுக்கு எதிரான ‘தார்மீகத் தூய்மை’ என்ற ஒற்றைப் பிம்பத்தை மூலதனமாக வைத்தே புதிய அரசியல் சக்திகள் உருவாகின்றன; ஆனால், அதே சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றியதும் அல்லது கைப்பற்ற முயலும்போதும் அதே பழைய அரசியல் சமரசங்களுக்குள் சுருங்கிவிடுகின்றன என்பதுதான் சமகால இந்திய மற்றும் தமிழக அரசியலின் கசப்பான எதார்த்தமாக உள்ளது என வேதனை தெரிவிக்கிறார்கள் அரசியல் திறனாய்வார்கள்.
‘பா.ஜ.க வாஷிங் மெஷின்’
தேசிய அளவில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் தங்களை ஊழலுக்கு எதிரான, தூய்மையான மாற்றுச் சக்தியாகக் கட்டமைத்துக் கொண்டுதான் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தன. ஆனால், காலப்போக்கில் அதிகாரத் தக்கவைப்பிற்காக யாரையெல்லாம் ‘ஊழல்வாதிகள்’ என்று கடுமையாகச் சாடினார்களோ, அவர்களையே பாஜக தங்களுக்குள் ஐக்கியப்படுத்திக் கொண்ட வரலாற்றுச் சோகத்தை நாடு கண்டது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் மகாராஷ்டிர அரசியல் களம். அங்கு தேசியவாத காங்கிரஸ் (NCP) கட்சியில் இருந்தபோது பா.ஜ.க-வினரால் மிகக்கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்ட சரத் பவாரின் குடும்பத்தினர் மற்றும் அஜித் பவார் தரப்பினர், பின்னாட்களில் பா.ஜ.க கூட்டணியில் சேர்க்கப்பட்டு அமைச்சரவையிலும் அமர வைக்கப்பட்டனர்.
இதேபோன்று அசாம், மேற்கு வங்கம், கர்நாடகா என வேறு பல்வேறு மாநிலங்களிலும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை (ED) வளையத்தில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் பா.ஜ.க-வில் இணைந்தவுடன் அவர்கள் மீதான வழக்குகள் மந்தமடைவதும், அவர்கள் தூய்மையானவர்களாக மாறுவதும் தொடர்கதையானது. எதிர்க்கட்சிகளால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்படும் இந்த ‘பா.ஜ.க வாஷிங் மெஷின்’ கலாச்சாரம், அரசியல் ஆதாயத்திற்காக ஊழல் புகார்கள் எவ்வாறு ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைத் தேசிய அளவில் அம்பலப்படுத்தியது.
தமிழகத்தின் ஊழல் புகார்களும் புதிய அடைக்கலங்களும்
தேசிய அளவிலான இந்த பிம்ப வீழ்ச்சிக்குத் தமிழ்நாட்டின் திராவிட அரசியலும் விதிவிலக்கல்ல; சொல்லப்போனால், இதில் தமிழகம் ஒரு முன்னோடியாகவே திகழ்கிறது. ஒரு ஆட்சியில் ஊழல் புகார்களுக்கு உள்ளாகும் தலைவர்கள், அடுத்த ஆட்சியில் தங்களது பதவிகளையும் செல்வாக்கையும் தக்கவைத்துக் கொள்ள ஆளுங்கட்சிக்குத் தாவுவது இங்கு பல தசாப்தங்களாகத் தொடர்கிறது.
கடந்த காலங்களில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சிகளிலும், பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியிலும் மிகக் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பல முன்னாள் அமைச்சர்கள், தங்களைக் காத்துக் கொள்ள தி.மு.க-வில் ஐக்கியமாகினர். எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இருந்த முத்துசாமி, ஜெயலலிதா அமைச்சரவையில் அங்கம் வகித்த எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன் போன்ற பல மூத்த தலைவர்கள் பின்னர் தி.மு.க-விற்குச் சென்று தங்களது அரசியல் செல்வாக்கையும் மந்திரிப் பதவிகளையும் தடையின்றித் தக்கவைத்துக் கொண்டனர்.
அதேபோன்று அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக உச்ச நீதிமன்றம் வரை வழக்குகளை எதிர்கொண்ட செந்தில் பாலாஜி, தி.மு.க-வில் இணைந்து மீண்டும் அமைச்சரானார். இதேபோல, அ.தி.மு.க-வின் நீண்டகால முகமாக இருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தங்களது அரசியல் பாதுகாப்புப் புகலிடமாக மாற்றுப் பாசறைகளைத் தேடிச் சென்ற வரலாறு தமிழகத்திற்கு உண்டு.
த.வெ.க வாஷிங் மெஷினில் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள்
அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய இரு திராவிடக் கட்சிகளுமே ஊழல் கறைபடிந்த தலைவர்களின் புகலிடமாக மாறிவிட்டன என்ற மக்கள் அதிருப்தியைப் பயன்படுத்தி, ‘தூய்மையான மாற்று அரசியல்’ மற்றும் தங்களை ஒரு “தூய சக்தி” என்று பிரகடனப்படுத்தி ஆட்சியைப் பிடித்தது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் . கரூரில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் விஜய், “தனது ஆட்சியில் அரசு அலுவலகங்களில் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கப்படுவதில்லை; ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் நடக்கிறது” என்று மிகவும் ஆணித்தரமாக முழங்கியிருந்தார்.

ஆனால், த.வெ.க-வின் இந்தத் தூய்மை வாதமும் மிகக்குறுகிய காலத்திலேயே பெரும் தார்மீகச் சவால்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் வெற்றிக்காகவும், தங்களது அதிகாரக் கட்டமைப்பை வலுப்படுத்திக் கொள்ளவும், கடந்த ஜூலை 2 அன்று அ.தி.மு.க-விலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க-வினர் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர். இதில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது பல கோடி ரூபாய் மதிப்புள்ள ‘குட்கா ஊழல் வழக்கு’ இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், த.வெ.க-வில் இணைந்துள்ள இவ்விரு முன்னாள் அமைச்சர்கள் மீதும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்த வழக்குகள் உள்ளிட்ட பல ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி இதனை மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வடக்கில் பா.ஜ.க பயன்படுத்தி வந்ததைப் போன்ற ‘வாஷிங் மெஷின்’ ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். இந்த புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கறைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே… உண்மையா?” எனத் த.வெ.க தலைவர் விஜய்யின் தூய்மைவாத அரசியலைத் தோலுரித்துக் காட்டும் வகையில் சாடியுள்ளார்.
தவெக அரசு மீது எழும் ஊழல் குற்றச்சாட்டுகள்

அதிகாரத்தை அடைந்தவுடன் அல்லது தக்கவைக்கும் நோக்கில் பழைய ஊழல் முகங்களையே மீண்டும் தங்களது கட்சியில் முதன்மைப்படுத்துவது, முதலமைச்சர் விஜய்யின் ‘ஊழலற்ற நிர்வாகம்’ என்ற முழக்கத்தின் மீதான நம்பகத்தன்மையை முற்றிலுமாகக் குலைக்கிறது. மறுபுறம், அடிமட்டக் களத்திலும் அரசு வழக்கறிஞர்கள் நியமன வசூல் புகார்கள், மாவட்ட வாரியாக மணல் குவாரிகளில் த.வெ.க பிரமுகர்களின் ‘கலெக்ஷன்’ அத்துமீறல்கள் எனப் புதிய அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் எழத் தொடங்கியுள்ளன.
அரசியல் தார்மீகங்கள் அனைத்தும் வெறும் தேர்தல் கால முழக்கங்களாகச் சுருங்கிவிடுவதால், ஊழல் என்பது பொதுமக்களின் அன்றாட வாழ்வில் ஒரு தவிர்க்க முடியாத, பழகிப்போன கூறாக மாறிவிட்டது. ஊழல் செய்யும் தலைவர்கள் தங்களது சட்டப் பாதுகாப்பிற்காகப் புதிய ‘வாஷிங் மெஷின்’களைத் தேடிக் கட்சிகளை மாற்றிக் கொண்டே இருக்கும் வரையிலும், புதிய கட்சிகள் தங்களது தூய்மை பிம்பத்தைச் சமரசம் செய்துகொள்ளும் வரையிலும், ஊழல் என்பது அரசியலில் எந்தவொரு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்ற கசப்பான உண்மையே மிஞ்சுகிறது என்பதே அரசியல் திறனாய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உண்மைதான் என்றாலும், அந்த மாற்றம் தூய்மையான அரசியலுக்கானதாக இருக்கக்கூடாதா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
– பா. முகிலன்
