ந்தியப் பொருளாதாரம் உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்ற செய்தி சர்வதேச அரங்கில் நமக்குக் பெருமையைத் தரலாம். ஆனால், இந்த அதிரடி வளர்ச்சியின் பின்னால் இருக்கும் ஒரு ஆபத்தான பலவீனத்தை அண்மையில் வெளியாகியுள்ள 2025-26 நிதியாண்டு இறக்குமதித் தரவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

ஒரே ஆண்டில் 776 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹75 லட்சம் கோடி அளவிற்குப் பொருட்களை இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. உலக அளவில் ஒட்டுமொத்த இறக்குமதியில் நாம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளோம். இது ஏதோ ஒரு வணிகச் சாதனை அல்ல, மாறாக இந்தியாவின் பொருளாதாரத் தன்னாதிக்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி என்று உலகளாவிய பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிதித்துறை நிபுணர்கள் தங்களின் கவலைகளைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.

வர்த்தகப் பற்றாக்குறையும் இந்திய ரூபாயின் வீழ்ச்சியும்

பொருளாதார வல்லுநர்களின் மிக முக்கியமான கவலை, மிதமிஞ்சிய இறக்குமதியால் ஏற்படும் வர்த்தகப் பற்றாக்குறைதான். நாம் உலக நாடுகளுக்கு விற்கும் பொருட்களின் மதிப்பை விட, அவர்களிடம் இருந்து வாங்கும் பொருட்களின் மதிப்பு பலமடங்கு அதிகமாக இருக்கும்போது ‘சர்வதேசச் செலுத்தல் சமநிலை'(Balance of Payments – BoP) கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

வெளிநாட்டு வர்த்தகத்திற்கு நாம் டாலர்களில் பணம் செலுத்த வேண்டியிருப்பதால், இந்திய ரூபாயின் மீதான உலகளாவிய அழுத்தம் அதிகரித்து, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்திக்க நேரிடும். இது உள்நாட்டில் ஒட்டுமொத்தப் பணவீக்கத்தையும், விலைவாசி உயர்வையும் தூண்டும் நச்சுக் சுழற்சியாக மாறிவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கச்சா எண்ணெய் பிடியில் சிக்கியிருக்கும் எரிசக்தித் துறை

இந்தியாவின் இறக்குமதி பட்டியலில் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களே முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. 2013-14 நிதியாண்டில் 165 பில்லியன் டாலராக இருந்த கச்சா எண்ணெய் இறக்குமதி, 2025-26 நிதியாண்டில் 174 பில்லியன் டாலராக (சுமார் ₹16 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. நாட்டின் மொத்த இறக்குமதியில் கச்சா எண்ணெயின் பங்கு மட்டும் 17.3 சதவீதமாக உள்ளது. இந்தியா தனது எண்ணெய் தேவையின் பெரும் பகுதியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது என்பதால், சர்வதேச சந்தை விலை உயர்வுகள் நேரடியாக இந்திய பொருளாதாரத்தை பாதிக்கின்றன.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, இந்த எரிசக்தித் தேவைக்கான செலவு மேலும் அதிகரித்து நாட்டின் இறையாண்மைக்கே நீண்ட கால அடிப்படையில் சவாலாக மாறும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

‘மேக் இன் இந்தியா’வின் பின்னால் இருக்கும் எதார்த்தம்

டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் முன்னேறியபோதிலும், மின்னணு பொருட்களின் இறக்குமதியும் கணிசமாக உயர்ந்துள்ளது. 2013-14-ல் 73 பில்லியன் டாலராக இருந்த மின்னணு பொருட்கள் இறக்குமதி, தற்போது 156 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதில் செல்போன்கள் மட்டும் ₹72,000 கோடிக்கும், எலக்ட்ரானிக் சிப்கள் ₹30,000 கோடிக்கும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மின்னணு உதிரிபாகங்களின் இறக்குமதி யாரும் எதிர்பாராத விதமாக 233 சதவீதம் அதிகரித்து 119 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. நாம் இந்தியாவில் மொபைல் போன்களைத் முழுமையாகத் தயாரிக்கவில்லை, மாறாக வெளிநாடுகளில் இருந்து உதிரிபாகங்களை வாங்கி இங்கு வெறும் ‘அசெம்பிள்’ மட்டுமே செய்கிறோம் என்பதை இந்த இறக்குமதி அப்பட்டமாக நிரூபிக்கிறது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். செமிகண்டக்டர் சிப்புகள், மதர்போர்டுகள் போன்ற முக்கியத் தொழில்நுட்பங்களுக்கு நாம் இன்னும் பிற நாடுகளைச் சார்ந்திருப்பது ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சி அல்ல.

அத்தியாவசியப் பொருட்களிலும் தங்கியிருக்கும் அவலம்

மின்னணுப் பொருட்கள் மட்டுமன்றி, இதர உற்பத்திப் பொருட்களின் இறக்குமதியும் 154 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. ரசாயனப் பொருட்கள் 74 பில்லியன் டாலராகவும், உலோகங்கள் மற்றும் தாதுக்கள் 43 பில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளன. விவசாயத் துறையில் உரங்கள் மற்றும் சில மூலப்பொருட்களுக்காகவும், மருந்து தயாரிப்புக்கான ஏபிஐ மூலப்பொருட்களுக்காகவும் இந்தியா இன்னும் வெளிநாடுகளை நம்பி வருவது கவலைக்குரிய அம்சமாக கருதப்படுகிறது. உலகளாவிய விநியோகச் சங்கிலியில் லேசான தொய்வு ஏற்பட்டாலும் இது இந்தியாவின் உணவுப் பாதுகாப்பையும், மருத்துவத் துறையையும் நிலைகுலையச் செய்துவிடும் அபாயம் உள்ளது.

வல்லுநர்கள் முன்வைக்கும் தீர்வுகள் என்ன?

உலகிலேயே மிக அதிகமாக பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் அமெரிக்கா (13.8%), சீனா (10.7%), ஜெர்மனி (5.8%) ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக 5.7 சதவீதப் பங்குடன் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் பெரும் நுகர்வோராக இருந்தாலும், அவர்களின் ஏற்றுமதித் திறனும், உள்நாட்டு உற்பத்தி வலிமையும் மிக அதிகம். ஆனால், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி இன்னும் உலகத் தரத்திற்கு வளரவில்லை என்பதையே இந்தத் தரவுகள் காட்டுகின்றன.

இந்த மிதமிஞ்சிய இறக்குமதிச் சுமையைக் குறைக்க மின்சார வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டைப் போர்க்கால அடிப்படையில் அதிகரிக்க வேண்டும் என்றும், வெறும் அசெம்பிளிங் செய்யாமல் எலக்ட்ரானிக் உதிரிபாகங்களை இந்தியாவிலேயே முழுமையாகத் தயாரிப்பதற்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் அவசரத் தீர்வுகளை முன்வைக்கின்றனர்.

பா. முகிலன்

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version