தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே, பாலிவுட் நடிகர் ரோகன் மெஹ்ராவை காதலித்து வருவதாகத் தற்போது வெளியாகியுள்ள தகவல் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இது தொடர்பாக ‘ஃபிலிம்ஃபேர்’ வெளியிட்டுள்ள செய்தியில், இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே ரகசியமாகக் காதலித்து வருவதாகவும், இவர்களது காதல் விவகாரம் தற்போது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்குத் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எப்போதும் மௌனம் காத்து வரும் நிலையில், இந்தத் தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூஜாவின் மனதைக் கவர்ந்த ரோகன் மெஹ்ரா, மறைந்த புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் வினோத் மெஹ்ராவின் மகன் ஆவார். ரோகன் ஏற்கனவே பாலிவுட்டில் ‘பஜார்’, ‘அத்பூத்’ மற்றும் ‘420 ஐபிசி’ போன்ற முக்கியமான படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை நிரூபித்துள்ளார். மிக நீண்ட நாட்களாகவே கிசுகிசுக்களில் சிக்காமல் இருந்த பூஜா ஹெக்டே, தற்போது ரோகனுடன் பொது இடங்களுக்குச் செல்வதும், இருவரும் நெருக்கமாகப் பழகி வருவதும் இந்தக் காதல் செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த க்யூட் ஜோடி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
