தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் சார்பாக இயல், இசை, நாடக துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2021, 2022 மற்றும் 2023ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளும், பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரஸ்வதி பெயரிலும் அகில இந்திய விருதுகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி இயல் பிரிவில் பாரதியார் விருது முனைவர் ந.முருகேச பாண்டியனுக்கும், இசை பிரிவில் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பத்மபூஷன் கே.ஜே.யேசுதாஸுக்கும், நடன பிரிவில் பால சரஸ்வதி விருது பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர 2021ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் பெருவோரின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, எழுத்தாளார் திருநாவுக்கரசு, கவிஞர் நெல்லை ஜெயந்தா, சமய சொற்பொழிவாளார் சந்திரசேகர் எனும் தங்கம்பட்டர், திருமுறை தேவார இசை ஓதுவார் சற்குருநாதன், தமிழிசை பாடகர் தக்கேசி, மிருதங்கம் வாசிப்பாளர் திருச்சூர் நரேந்திரன், கோட்டு வாத்தியம் நரசிம்மன், நாதசுர ஆசிரியர் பில்லப்பன், தவில் வித்துவான் திருவல்லிக்கேணி சேகர், பரதநாட்டிய ஆசிரியர் பழனியப்பன், திரைப்பட நடிகர் எஸ்..ஜே.சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், சின்னத்திரை நடிகர் கமலேஷ் உள்ளிட்ட 30 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டுக்கான விருதை எழுத்தாளர் சாந்தகுமாரி சிவகடாட்சம், இலக்கிய பேச்சாளார் அப்துல் காதர், குரலிசை சாரதா ராகவ், நாடக நடிகர் பொன் சுந்தரேசன், நாடக இயக்குநர் கவிஞர் நன்மாறன், நடிகர் விக்ரம் பிரபு, நடிகை ஜெயா, பாடலாசிரியர் விவேகா, சின்னத்திரை நடிகை மெட்டி ஒலி காயத்ரி, பொம்மலாட்டம் கலைவாணன், ஓவியர் லோகநாதன் உள்ளிட்டோர் பெறுகின்றனர்.
2023ம் ஆண்டுக்கான விருது கவிஞர் ஜீவபாரதி, நாதசுவரம் ரவிச்சந்திரன், தவில் ராமஜெயம் பாரதி, நடிகர் மணிகண்டன், குணச்சித்திர நடிகர் ஜார் மரியான், இசையமைப்பாளர் அனிருத், நடன இயக்குநர் சாண்டி, பின்னணி பாடகி ஸ்வேதா மோகன், திரைப்பட செய்தி தொடர்பாளர் நிகில் முருகன், வில்லுப்பாட்டு ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.